சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in Tamil Hindi/Sanskrit Telugu Malayalam Bengali Kannada English ITRANS Marati Gujarathi Oriya Singala Tibetian Thai Japanese Urdu Cyrillic/Russian
Selected thirumurai | thirumurai Thalangal | All thirumurai Songs |
Thirumurai |
4.043
திருநாவுக்கரசர்
தேவாரம்
மறை அது பாடிப் பிச்சைக்கு பண் - திருநேரிசை:கொல்லி (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளிநாதர் திருமேற்றளிநாயகி) Audio: https://www.youtube.com/watch?v=4KnYtA_BFEc |
7.021
சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருப்பாட்டு
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; பண் - நட்டராகம் (திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) திருமேற்றளியீசுவரர் காமாட்சியம்மை) |
Back to Top
திருநாவுக்கரசர் தேவாரம்
4.043  
மறை அது பாடிப் பிச்சைக்கு
பண் - திருநேரிசை:கொல்லி (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு திருமேற்றளிநாயகி உடனுறை அருள்மிகு திருமேற்றளிநாதர் திருவடிகள் போற்றி )
மறை அது பாடிப் பிச்சைக்கு என்று அகம் திரிந்து வாழ்வார் பிறை அது, சடைமுடி(ம்)மேல்; பெய்வளையாள் தன்னோடும் கறை அது கண்டம் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் இறையவர்-பாடல் ஆடல் இலங்கு மேற்றளியனாரே. | [1] |
மால் அன மாயன் தன்னை மகிழ்ந்தனர்; விருத்தர் ஆகும் பாலனார்; பசுபதி(ய்)யார்; பால் வெள்ளைநீறு பூசிக் காலனைக் காலால் காய்ந்தார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏல நல் கடம்பன் தந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [2] |
விண் இடை விண்ணவர்கள் விரும்பி வந்து இறைஞ்சி வாழ்த்த, பண் இடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்பார் கண் இடை மணியின் ஒப்பார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண் இடை எழுத்தும் ஆனார்-இலங்கு மேற்றளியனாரே. | [3] |
சோமனை அரவினோடு சூழ் தரக் கங்கை சூடும் வாமன்; நல் வானவர்கள் வலம் கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏமம் நின்று ஆடும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [4] |
ஊனவர்; உயிரினோடும் உலகங்கள் ஊழி ஆகி, தானவர் தனமும் ஆகி, தனஞ்சயனோடு எதிர்ந்த கானவர்; காளகண்டர்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏனம் அக்கோடு பூண்டார்-இலங்கு மேற்றளியனாரே. | [5] |
மாயன் ஆம் மாலன் ஆகி, மலரவன் ஆகி, மண் ஆய், தேயம் ஆய், திசை எட்டு ஆகி, தீர்த்தம் ஆய், திரிதர்கின்ற காயம் ஆய், காயத்து உள்ளார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் ஏய மென் தோளிபாகர் -இலங்கு மேற்றளியனாரே. | [6] |
மண்ணினை உண்ட மாயன் தன்னை ஓர் பாகம் கொண்டார் பண்ணினைப் பாடி ஆடும் பத்தர்கள் சித்தம் கொண்டார் கண்ணினை மூன்றும் கொண்டார்; காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எண்ணினை எண்ண வைத்தார் -இலங்கு மேற்றளியனாரே. | [7] |
செல்வியைப் பாகம் கொண்டார்; சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணியோடு மா மலர்க்கொன்றை சூடி கல்வியைக் கரை இலாத காஞ்சி மா நகர் தன்னுள்ளால் எல்லியை விளங்க நின்றார்-இலங்கு மேற்றளியனாரே. | [8] |
வேறு இணை இன்றி என்றும் விளங்கு ஒளி மருங்கினாளைக் கூறு இயல் பாகம் வைத்தார்; கோள் அரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார்; அணி பொழில் சச்சி தன்னுள் ஏறினை ஏறும் எந்தை-இலங்கு மேற்றளியனாரே. | [9] |
தென்னவன் மலை எடுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலால் ஊன்ற, மணி முடி நெரிய, வாயால் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர்; காஞ்சி தன்னுள் இன்னவற்கு அருளிச்செய்தார்-இலங்கு மேற்றளியனாரே. | [10] |
Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருப்பாட்டு
7.021  
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்;
பண் - நட்டராகம் (திருத்தலம் திருக்கச்சிமேற்றளி (பிள்ளைப்பாளையம்) ; (திருத்தலம் அருள்தரு காமாட்சியம்மை உடனுறை அருள்மிகு திருமேற்றளியீசுவரர் திருவடிகள் போற்றி )
நொந்தா ஒண்சுடரே! நுனையே நினைந்திருந்தேன்; வந்தாய்; போய் அறியாய்; மனமே புகுந்து நின்ற சிந்தாய்! எந்தைபிரான்! திரு மேற்றளி உறையும் எந்தாய்! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே . | [1] |
ஆள்-தான் பட்டமையால் அடியார்க்குத் தொண்டு பட்டுக் கேட்டேன், கேட்பது எல்லாம்; பிறவா வகை கேட்டொழிந்தேன்; சேட்(ட்)டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும் மாட்(ட்)டே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே . | [2] |
மோறாந்து ஓர் ஒரு கால் நினையாது இருந்தாலும், வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே! சேறு ஆர் தண் கழனித் திரு மேற்றளி உறையும் ஏறே! உன்னை அல்லால் இனி ஏத்த மாட்டேனே . | [3] |
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்; எற்றால் என் குறைவு? என் இடரைத் துறந்தொழிந்தேன்; செற்றாய், மும்மதிலும்! திரு மேற்றளி உறையும் பற்றே! நுன்னை அல்லால் பணிந்து ஏத்த மாட்டேனே . | [4] |
எம்மான், எம் அ(ன்)னை, என்றவர் இட்டு இறந்தொழிந்தார்; மெய்ம் மால் ஆயின தீர்த்து அருள் செயும் மெய்ப்பொருளே! கைம்மா ஈர் உரியாய்! கனம் மேற்றளி உறையும் பெம்மான்! உன்னை அல்லால் பெரிது ஏத்த மாட்டேனே . | [5] |
நானேல் உன் அடியே நினைந்தேன்; நினைதலுமே ஊன் நேர் இவ் உடலம் புகுந்தாய்; என் ஒண்சுடரே! தேனே! இன்னமுதே! திரு மேற்றளி உறையும் கோனே! உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்த மாட்டேனே . | [6] |
கை ஆர் வெஞ்சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே, எய்தாய், மும்மதிலும் எரியுண்ண; எம்பெருமான்! செய் ஆர் பைங்கமலத் திரு மேற்றளி உறையும் ஐயா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . | [7] |
விரை ஆர் கொன்றையினாய்! விமலா! இனி உன்னை அல்லால், உரையேன், நா அதனால், உடலில் உயிர் உள்ளளவும்; திரை ஆர் தண்கழனித் திரு மேற்றளி உறையும் அரையா! உன்னை அல்லால் அறிந்து ஏத்த மாட்டேனே . | [8] |
நிலை ஆய் நின் அடியே நினைந்தேன்; நினைதலுமே; தலைவா! நின் நினையப் பணித்தாய்; சலம் ஒழிந்தேன்; சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும் மலையே! உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்த மாட்டேனே . | [9] |
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்வாய்ச் சீர் ஊரும் புறவில்-திரு மேற்றளிச் சிவனை ஆரூரன்(ன்) அடியான்-அடித்தொண்டன், ஆரூரன்-சொன்ன சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே . | [10] |